மொரோக்கோ மன்னர் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை அறிவித்தார்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூன் 18, 2011

மொரோக்கோவில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான முன்மொழிவுகளை மன்னர் ஆறாம் முகம்மது அறிவித்துள்ளார்.


மொரோகோ மன்னர் ஆறாம் முகம்மது

இம்முன்மொழிவுகள் மக்களாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்கள், மனித உரிமைகளைப் பேணல், பேச்சுரிமைகளைப் பேணல் போன்ற பல அம்சங்கள் இந்த முன்மொழிவுகளில் இடம்பெற்றுள்ளன.


பிரதமருக்கும், நாடாளுமன்றத்திற்கும் அதிக நிருவாக அதிகாரங்களை வழங்கல், பேர்பர் மொழியை அரபு மொழியுடன் இணைந்து நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக்குவது போன்ற முக்கிய சீர்திருத்தங்களும் இதில் அடங்கியிருந்தன.


இந்த முன்மொழிவுகள் சூலை மாதம் 1 ஆம் நாள் பொதுமக்கள் கருத்துக்கணிப்புக்கு விடப்படும்.


மத்திய கிழக்கு, மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் அண்மைக்காலங்களில் இடம்பெற்று வரும் மன்னராட்சிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடுத்து கடந்த மார்ச் மாதத்தில் மொரோக்கோ மன்னர் நாட்டில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரப்போவதாக அறிவித்திருந்தார்.


ஆனாலும், ஆயிரக்கணக்கானோர் மொரோக்கோவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.


மன்னர் முகம்மது அரசியலமைப்பு மாற்றங்களை முன்மொழிவதற்காக அண்மையில் ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்திருந்தார். அக்குழுவின் ஆலோசனைப்படியே இந்த முன்மொழிவுகள் மன்னரால் அறிவிக்கப்பட்டுள்ளன.


மொரோக்கோவில் வேலையில்லாமை, மற்றும் வறுமை நிலை அதிகரிப்பு போன்றவற்றால் அந்நாடு பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]