லாகூர் தற்கொலைத் தாக்குதல்களில் 45 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 13, 2010

பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் இடம்பெற்ற பல குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 45 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


முதலாவது தாக்குதல் லாகூரின் மையப் பகுதியில் ஆர்.ஏ. சந்தையில் இடம்பெற்றுள்ளது. இங்கு அடுத்தடுத்து 15 செக்கன் இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் இராணுவத்தினர்.


குண்டுதாரிகள் மோட்டார் உந்துருளியில் வந்து இராணுவ வாகனங்களை அண்மித்த போது தம்முடன் எடுத்து வந்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதாக பஞ்சாபின் சட்டத்துறை அமைச்சர் ராணா சனவுல்லா தெரிவித்தார்.


இரண்டாவது தாக்குதல் காவல் நிலலயம் ஒன்றை இலக்காக வைத்து நடத்தப்பட்டது. இதில் குறைந்தது 4 பேர் இறந்துள்ளனர்.


இத்தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோராவிடினும், தாலிபான்களே இதனைச் செய்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


வெள்ளிக்கிழமை மேலும் பல குண்டுச் சத்தங்கள் நகரில் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த திங்களன்று லாகூரில் இரகசியக் காவல்துறையினர் பயன்படுத்திய கட்டடம் ஒன்றின் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட்டனர்.


இத்தாக்குதலை அடுத்து, இராணுவம், மற்றும் அமெரிக்கப் படைகள் தம்மீதான தாக்குதல்களை நிறுத்தாவிடின் தாம் மேலும் 3,000 தற்கொலைக் குண்டுதாரிகளை நாடு முழுவதும் அனுப்ப விருப்பதாக தாலிபான்கள் அறிவித்திருந்தனர்.

மூலம்[தொகு]