லிட்டில் இந்தியா கலவரத்தில் ஈடுபட்ட 53 பேரை சிங்கப்பூர் நாடுகடத்துகிறது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

புதன், திசம்பர் 18, 2013

இரு வாரங்களுக்கு முன்னர் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் இடம்பெற்ற கலவரங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 53 வெளிநாட்டுத் தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றவிருப்பதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. கலவரங்களில் ஈடுபட்ட மேலும் 28 பேருக்கு எதிராக வழ்க்குத் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.


இம்மாதம் எட்டாம் நாள் லிட்டில் இந்தியா பகுதியில் இந்தியத் தொழிலாளி ஒருவர் பேருந்து ஒன்றினால் மோதுண்டு இறந்ததை அடுத்து அங்கு கலவரம் வெடித்தது. காவல்துறையினர் உட்படப் பலர் காயமடைந்தனர், வாகனங்கள் பல தீக்கிரையாக்கப்பட்டன.


நாடு கடத்தப்படவிருப்போரில் 52 பேர் இந்தியர்கள் என்றும், ஒருவர் வங்காளதேசத்தவர் என்றும் காவல்துறை ஆணையர் இங் ஜூ ஹீ கூறினார்.


இக்கல­வ­ரம் தொடர்­பி­லான காவல்துறையினரின் முதற்கட்ட விசா­ரணை­கள் பெரு­ம­ளவு முடிந்­து­விட்­ட­தாக அறிவிக்கப்­பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டுக் குற்றம் சாட்டப்பட்ட 35 இந்தியர்களில் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏனைய 28 பேர் மீதான விசாரணைகள் தொடருகின்றன. ஏனைய 53 பேரும் நேற்றுக் காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனைகளில் பிடிபட்டனர்.


சட்டத்தைப் பின்பற்றுபவர்கள் கவலைப்படத் தேவையில்லை, அதே வேளையில், தவறிழைப்போர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என துணைப் பிரதமர் டியோ சீ இயன் செயுதியாளர்களிடம் கூறினார்.


விசாரணை எதுவுமின்றித் தன்னிச்சையான நாடுகடத்தல் பெரும் கவலையைத் தருகிறது என சிங்கப்பூர் வர்க்ஃபெயர் என்ற தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]