வடகிழக்கு பர்மாவில் 6.8 அளவு நிலநடுக்கம்: பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 25, 2011

பர்மாவின் வடகிழக்குப் பகுதியில் லாவோஸ், தாய்லாந்து எல்லைப் பகுதியில் 6.8 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.


நேற்று வியாழக்கிழமை கிரீனிச் நேரப்படி 1355 மணிக்கு தாய்லந்தின் சியாங் ராய் நகரில் இருந்து 110 கிமீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 800 கிமீ தெற்கே தாய் தலைநகர் பாங்கொக், மற்றும் வியட்நாமியத் தலைநகர் ஹனோய் நகரங்கள் வரை உணரப்பட்டது. இந்நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால் உயிரிழப்புகள் இன்னும் அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


பாதைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 130 கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பர்மாவின் பான் தாடுவா, பான் லாயென் ஆகிய பிரதேசங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆழிப்பேரலை அபாயம் இல்லை என பசிபிக் சுனாமி அவதான நிலையம் அறிவித்துள்ளது.


மூலம்[தொகு]