விக்கிலீக்ஸ்: ஈழப்போர்க்குற்றங்களுக்கு ராஜபக்ச பொறுப்பு என அமெரிக்கா கருதுகிறது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 3, 2010

நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவே பொறுப்பு என இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதர் கருதியதாக தற்போது விக்கிலீக்ஸ் இணையத்தளம் கசியவிட்டுள்ள ஆவணங்கள் காட்டுகின்றன.


இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து அமெரிக்கத் தூதர் அனுப்பிய இரகசியத் தகவல் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.


இவ்வாண்டு சனவரி 15 ஆம் நாள் கொழும்புக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதர் பட்ரீசியா பூட்டெனிசு அமெரிக்க அரசுக்கு அனுப்பிய ஒரு செய்தியில், 2009 ஆண்டு மே மாதத்துக்கு முன்னரான படுகொலைகளுக்கு அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் இராணுவத் தலைவர் சரத் கொன்சேக்காவுமே காரணம் எனத் தெரிவித்துள்ளார்.


ஒரு நாட்டின் அரசாங்கம் தனது இராணுவத்தினர் மீதும், மூத்த அதிகாரிகள் மீதும் போர்க்குற்றம் இழைத்தது தொடர்பான விசாரணையை நடத்தியதாக சரித்திரத்தில் இது வரை எவ்வித சம்பவமும் காணப்படவில்லை. இலங்கையைப் பொருத்தவரையில், போர்க் குற்றங்களுக்கான பொறுப்பு ரஜபக்ச சகோதரர்கள், ஜெனரல் பொன்சேக்கா உட்பட நாட்டின் மூத்த சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளைச் சார்ந்ததாக இருப்பதாகவும் அவர் அனுப்பிய தந்திச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகளவில் தமிழர்கள் இந்த பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் இலங்கையில் இருக்கும் தமிழர்களோ அரசை கடுமையாக எதிர்ப்பதற்கு இது நேரமில்லை என்றும் கருதுகின்றனர் என்று கூறியுள்ளார். இலங்கையின் தமிழ்த் தலைவர்கள் போர்க் குற்ற விசாரணை பற்றி அதிகம் அழுத்தம் கொடுத்தால் அதனால் தாம் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தை தம்மிடம் வெளியிட்டதாகவும், ராஜபக்சே அரசை எதிர்ப்பவர்கள் திடீர் என்று மாயமாகிவிடுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர் என்றும் அமெரிக்கத் தூதர் அனுப்பிய செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


மூலம்[தொகு]