அக்டோபரில் 700 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 28, 2011

வரும் அக்டோபர் மாத இறுதியில் உலகின் மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டும் என நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.


கடந்த 1960ல் உலக மக்கள் தொகை 300 கோடியாக இருந்தது. 40 ஆண்டுகளில், 1999 இல் இரட்டிப்பாகி 600 கோடியானது. இப்போது ஒவ்வொரு வினாடிக்கும் 5 குழந்தைகள் பிறக்கின்றன. இதனால் மக்கள் தொகை ஆண்டுக்கு 7.8 கோடி அதிகரிக்கிறது. இதே வேகம் தொடருமானால், 2025ம் ஆண்டில் மக்கள் தொகை 800 கோடியாகவும், 2050ம் ஆண்டில் 900 கோடியாகவும் அதிகரிக்கும் என ஐநா தெரிவித்துள்ளது. குறிப்பாக, உலகின் ஏழை நாடுகளில் தான் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. ஏழை நாடுகளின் மக்கள் தொகை மட்டும் அடுத்த பத்தாண்டில் இரண்டு மடங்காக உயரும்.


இப்போது, 10 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எண்ணிக்கை 180 கோடியாக உள்ளது. இப்போது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், ஒவ்வொரு தம்பதியும் சராசரியாக 2.1 குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும். ஏழை நாடுகளில் வேகமாக மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலோ நிலைமை எதிர்மாறாக உள்ளது. இதனால், வரும் காலத்தில் ஓய்வு பெறுவோரை ஈடுகட்டுவதற்கு போதுமான இளைஞர்கள் இருக்க மாட்டார்கள் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.


மூலம்[தொகு]