அசாம் மாநிலத்தில் நடந்த குண்டுத் தாக்குதலில் 7 பேர் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 23, 2009


இந்தியாவின் வட-கிழக்கில் அசாம் மாநிலத்தில் நடந்துள்ள குண்டுத் தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டு 25 பேர் காயமடைந்தனர்.


தலைநகர் குவகாத்தியில் இருந்து 70 கிமீ தூரத்தில் உள்ள நல்பாரி நகரில் ஒரு காவல் நிலையத்தின் வெளியே விடப்பட்டிருந்த சைக்கிள்களில் இரண்டு குண்டுகள் வெடித்ததாக பொலிசார் கூறுகின்றனர். உல்ஃபா என்ற அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி பிரிவினைவாத குழுவே இந்தத் தாக்குதலின் காரணம் என்று பழிசுமத்தும் பொலிசார், கடந்த வாரம் இந்தக் குழுவின் இரண்டு தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதற்கு பதிலடியாக அவர்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை உரிமை கோரவில்லை.


அசாமில் கடந்த பத்து வருடங்களில் நடந்துள்ள அரசியல் வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.


தமது மாநிலத்தின் வளங்களை எல்லாம் சுரண்டி எடுத்துக்கொண்டாலும் அப்பகுதியின் பூர்வகுடி மக்களுக்கு நன்மை ஒன்றும் செய்யப்படுவதில்லை என பிரிவினைவாதக் குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன. 1979 ஆம் ஆண்டில் இருந்து உல்ஃபா அமைப்பு தனிநாடு கோரிப் போராடி வருகிறது.

மூலம்[தொகு]