அமெரிக்கப் படையின் கடைசி இராணுவக் குழுவும் ஈராக்கிலிருந்து சென்றது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, திசம்பர் 18, 2011

ஈராக்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த ஐக்கிய அமெரிக்கப் படையின் கடைசி ராணுவக் குழு நேற்று முன்தினம் ஈராக்கில் இருந்து விடைபெற்றது. இதையொட்டி ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் சார்பாக பிரிவு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க கர்னல் ரிச்சார்ட் கைசர், ஈராக் அதிகாரி ஹூசைன் அல் அசாதி உள்ளி்ட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய உசைன் அல் அசாதி ஈராக்கில் உள்ள கடைசி ராணுவக் குழு விடை பெறுவதாக ஈராக் மக்களுக்கு அறிவிப்பதில் பெருமை அடைகிறேன். இன்று எங்கள் பணியின் கடைசி பக்கத்தை திருப்புகிறோம். ஈராக்கில் உள்ள கடைசி ராணுவப் படைக்கு பொறுப்பாளராக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். ஈராக்கில் இருந்த அமெரிக்க ராணுவம் படிப்படியாக நாடு திரும்பி வந்த நிலையில் இறுதியாக நாசிரியாவில் மட்டுமே 4,000 அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.


ஈராக்கில் சதாம் உசேனை வீழ்த்தும் திட்டத்துடன், கடந்த 2003ம் ஆண்டு 1,70,000 அமெரிக்க படைவீரர்கள் களமிறங்கினர். நீண்ட தேடுலுக்கு பிறகு சதாம் உசேனை கைது செய்து தூக்கிலிடப்பட்டார். பின்பு சதாமின் ஆதரவாளர்கள் ஈராக்கில் வன்முறைகளில் ஈடுபட்டனர். ஆங்காங்கே குண்டுவெடிப்புகளும், வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. இதனை தடுக்கும் பொருட்டு, அமெரிக்க படைகள் ஈராக்கில் தொடர்ந்து பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு இறுதிக்குள் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் படிப்படியாக அமெரிக்காவிற்கு திரும்ப அழைத்து கொள்ளப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]