அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது: முதல்வர் ஜெயலலிதா

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 13, 2013

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் கைதிற்குப் பிறகு வன்முறையில் ஈடுபட்டு வரும் பாட்டாளி மக்கள் கட்சியை தடை செய்ய தமிழக அரசு தயங்காது என தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


சட்டசபையில் இன்று அனைத்துக் கட்சிகளின் கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு கூறியுள்ளார். "தமிழ்நாட்டில் நடக்கும் கலவரங்கள் அனைத்திற்கும் விடுதலை சிறுத்தைகள், தமிழக அரசு மற்றும் காவல் துறை இவை மூன்றும்தான் காரணம் என்று கூறியுள்ள ராமதாஸின் கருத்து பொய்யானது. பா.ம.க எந்த வன்முறை செயலையும் செய்யாது என்று கூறுவதன் மூலம் பா.ம.க நிகழ்த்திய வன்முறைகளில் இருந்து தப்பித்துவிடலாம் என்று ராமதாஸ் நினைக்கிறார்" என அவர் கூறினார்.


மேலும், தன் மீதும், தமிழக அரசு மற்றும் காவல் துறை மீதும் அவதூறுகளை பரப்பி வரும் ராமதாஸ் மீது அரசின் சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.


"பா.ம.க நடத்திய வன்முறை காரணமாக அரசுக்கும் தனியாருக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்கள், தனியார் சொத்துக்கள் ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு பா.ம.கவினரிடம் இருந்து நஷ்டஈடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வண்ணம் வன்முறைச் செயல்களில் எந்தக் கட்சி ஈடுபட்டாலும், அந்தக் கட்சியை தடை செய்ய அரசு தயங்காது." என அவர் உறுதிபடக் கூறினார்.


மூலம்[தொகு]