அல்ஜீரிய இராணுவ விமான விபத்தில் 77 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 12, 2014

அல்ஜீரியாவில் சி-130 ரக விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியதில் 77 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் ராணுவ வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் சென்றதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறின. இவ்விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்.


ஓம் எல் புவாகி என்ற பகுதி

நேற்று செவ்வாய்க்கிழமை ஓர்க்லா என்ற இடத்தில் இருந்து கான்ஸ்டான்டைன் என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்ட இவ்விமானம் தலைநகர் அல்ஜீயர்ஸின் தெற்கே 380 கிமீ தொலைவில் உள்ள ஓம் எல் புவாகி என்ற பகுதியில் ஜெபெல் பெர்ட்டாசு என்ற மலையில் விழுந்து நொறுங்கியதாக அல்ஜீரியத் தேசிய வானொலி தெரிவித்தது. விபத்திற்கான காரணம் குறித்துக் கண்டறிய விமானத்தின் கருப்பு பெட்டியை தேடுமாறு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசமான காலநிலையே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.


உயிரிழந்த இராணுவத்தினர்கள் "மாவீரர்கள்" என அந்நாட்டு அரசுத்தலைவர் அப்தெலாசிசு பூட்டெஃபிக்கா கூறினார். இன்று முதல் மூன்று நாட்கள் தேசிய துக்க நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 10 ஆண்டுகளில் அல்சீரியாவில் இடம்பெற்ற மிக மோசமான விமான விபத்து இதுவாகும். இராணுவ எர்க்கூலிசு விமானம் விபத்துக்குள்ளாவது இது மூன்றாவது தடவையாகும்.


2003 ஆம் ஆண்டில் ஏர் அல்ஜீரியா போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளாகியதில் 103 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]