இத்தாலியின் புதிய பிரதமராக மரியோ மொன்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 14, 2011

இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது பதவியைத் துறந்ததை அடுத்து புதிய பிரதமராக மரியோ மொன்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


புதிய பிரதமர் மரியோ மொன்டி

யூரோ வலய நாடுகளில் தீவிர அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள தீவிர கடன் நெருக்கடிகளையடுத்து சமீபத்தில் நடந்த ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் இத்தாலி தன் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நிதிச் சீர்திருத்தச் சட்டமூலம் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இது தொடர்பான வாக்கெடுப்பில் எதிர்க் கட்சிகள் எதுவும் வாக்களிக்காமையினால் பெர்லுஸ்கோனி பெரும்பான்மை இழந்து விட்ட நிலையில் தமது பதவியைத் துறக்க முன்வந்தார்.


முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளரும் பொருளாதார நிபுணருமான திரு மொன்டியின் (வயது 68) நியமனத்தை இத்தாலிய அதிபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.


பெர்லுஸ்கோனி தனது பதவி விலகல் கடிதத்தை அதிபரிடம் கையளிக்க வந்த போது அதிபர் மாளிகைக்கு வெளியே கூடியிருந்த மக்கள் அவருக்கு எதிராகக் கூச்சலிட்டுத் ஆர்ப்பாட்டம் செய்தனர். பெர்லுஸ்கோனி மூன்று தடவைகள் பிரதமராகப் பதவியில் இருந்தார். இவர் பல பாலியல் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.


மூலம்[தொகு]