இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைகள் சென்னையில் துவங்கியது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 28, 2014

தமிழக, இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இரு தரப்புகளுக்கும் இடையிலான முதற்கட்டப் பேச்சுக்கள் சென்னையில் நேற்று நடைபெற்றது.


மீனவர்

15 பேர் கொண்ட குழு இலங்கை சார்பாகவும், தமிழகத்தைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் பதினேழுக்கும் மேற்பட்டோரும், இந்திய நடுவண் அரசின் உயரதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.


தமிழக மீனவர்கள் பாரம்பரிய இடங்களில் மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


இலங்கை சார்பில் இலங்கை மீன்பிடித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிமல் எட்டியாரச்சி, மீன்பிடியமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் எஸ். சுபசிங்க, மீன்பிடி திணைக்கள கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான உதவிப் பணிப்பாளர் லால் டி சில்வா, மன்னார் மீன்பிடி உதவிப் பணிப்பாளர் பி. எஸ். மிரெண்டா, அமைச்சின் ஆலோசகர் சதாசிவம், மன்னார் மீன்பிடி சங்கத் தலைவர்களான ஜஸ்டின் சொய்ஸா, ஜேசுநாதன் சூசை, யாழ். மீன்பிடி சங்கத் தலைவர் பொன்னம்பலம், முல்லைத்தீவு தலைவர் ஜெனிபர், கிளிநொச்சியைச் சேர்ந்த பிரான்சிஸ், புத்தளத்தைச் சேர்ந்த கெமினஸ் பெரேரா, நீர்கொழும்பு சங்கத் தலைவர் மைக்கல் பெர்னாண்டோ, திருகோணமலையைச் சேர்ந்த செந்தில் நாதன் மற்றும் இந்திய இலங்கை மீன்பிடி ஆலோசகர் சபை உறுப்பினர் அந்தோனி முத்து ஆகியோரும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.


தமிழக மீனவர்கள் தங்கள் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிக்கக்கூடாது என்றும் சர்ச்சைக்குரிய ட்ராலர்கள் மற்றும் இழுவை வலை, இரட்டை மடிப்பு வலை போன்ற உபகரணங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் இலங்கை பிரதிநிதிகள் வலியுறுத்தினர். பாக். ஜல சந்தி பகுதியில் மீன் பிடிக்க அனுமதிப்பதோடு, தங்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தக்கூடாது என்று தமிழகப் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.


மூலம்[தொகு]