இந்திய மீனவர்கள் 111 பேர் ஒப்படைப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 25, 2014

கடந்த ஆண்டு முல்லைத்தீவு அலம்பில் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 111 இந்திய மீனவர்களும் இன்று இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்படுவர் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தென்னிந்திய மீன்பிடிப்படகு

111 இந்திய மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதிபதி முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனாலும், மீனவர்கள் தமது படகுகளைத் திரும்பப் பெறாமல் நாடு திரும்புவதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர். இதனை அடுத்து இது குறித்த வழக்கு விசாரணை கடந்த வாரம் சனவரி 17 அன்று திருகோணமலை நீதிபதி ரீ. சரவணராஜா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த 15 படகுகளையும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.


மீனவர்களும் படகுகளும் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு விடுவிக்கப்படுவர்.


இதற்கிடையில், கடந்த 16-ம் தேதி இலங்கைக் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 71 பேரை இலங்கை படையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம், இலங்கை கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மூலம்[தொகு]