இந்தியப் பெருங்கடல் கடற்படை மாநாடு 2012 கொழும்பில் ஆரம்பம்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 29, 2012

இந்தியப் பெருங்கடல் கடற்படை மாநாடு 2012 நேற்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள கலதாரி விடுதியில் ஆரம்பமானது. இன்றும் நடைபெறவுள்ள இந்த உயர்மட்ட மாநாட்டில் 14 நாடுகளைச் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்ட கடற்படை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். செயற்பாட்டுத் திறன் தொடர்பாக தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டிணைப்பை மேம்படுத்தல் என்ற தொனிப் பொருளில் அம்மாநாடு நடைபெறுகின்றது.


பிராந்தியக் கடல் பாதுகாப்பு நடவடிக்கையை மையமாக கொண்டு 2008 ம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் கடற்படை மாநாடு முதற்தடைவையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடல் பாதுகாப்பு, கூட்டிணைப்பு போன்ற விடயங்களில் இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகள் பயன் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் ஊடாக பல்வேறு விடயங்கள் ஆராயப்படவுள்ளன.


இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், அவுத்திரேலியா, பிரான்சு, இந்தோனேசியா, கென்யா, குவைத்து, ஓமான், சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் கடற்படை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்ற இந்த மாநாட்டின் போது கடற்படை நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி பட்டறையும் இடம்பெறவுள்ளது.


மூலம்[தொகு]