இலங்கை சிறையில் கொல்லப்பட்ட நிமலரூபனின் உடல் நிபந்தனையுடன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 21, 2012

இலங்கையின் வவுனியா சிறைச்சாலையிலிருந்து தெற்கே மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறையில் வைத்து அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் நிமலரூபன் என்ற இளைஞரின் சடலத்தை வவுனியாவில் அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்வதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் நேற்று அனுமதியளித்துள்ளது.


இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாதவாறு வவுனியாவின் மூத்த காவல்துறை அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இந்த அனுமதியை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.


தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக் கூறி நிமலரூபனின் உடலை அவர் இறந்த மகர நகரிலேயே அடக்கம் செய்யவேண்டும் என்று மகர நீதவான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். ஆனாலும், தமது மகனின் சடலத்தை தமது சொந்த ஊரான வவுனியாவில் தான் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நிமலரூபனின் பெற்றோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். நிமலரூபனின் உடல் சூலை 23 திங்களன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்.


மூலம்[தொகு]