இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 14, 2013

இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியும், அதற்கு இந்தியா உரியனவற்றை செய்யவேண்டும் எனக்கூறியும், இலங்கை அரசுக்கு எதிராகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


காலவரையறையற்ற உண்ணாநிலை, அடையாள உண்ணாநிலை, சாலை மறியல், தொடர்வண்டி மறியல், அரசு அலுவலகங்களை முற்றுகையிடுதல், உருவபொம்மை எரித்தல், உள்ளிருப்புப் போராட்டம், வகுப்புகளைப் புறக்கணித்தல், அமைதிப் பேரணி செல்லல் போன்ற போராட்டங்களை அவர்கள் நடத்திவருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 8) சென்னையின் குறிப்பிடத்தக்க கல்லூரியான லயோலா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 8 பேர், காலவரையறையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் துவக்கினர். இந்தப் போராட்டமே பின்னர் தமிழகத்தின் பிறபகுதிகளுக்கும் பரவியதாக ‘ஊடக செய்தி அறிக்கைகள்’ தெரிவிக்கின்றன.


பல்வேறு பகுதிகளிலுள்ள பலதரப்பட்ட மாணவர்களால் நடத்தப்படும் இப்போராட்டங்களில் எழுப்பப்படும் கோரிக்கைகள் சற்று வேறுபட்டாலும், அடிப்படை நோக்கம் ஒன்றே என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.


மூலம்[தொகு]