இலங்கையின் முன்னாள் அமைச்சர் அநுருத்த ரத்வத்தை காலமானார்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், நவம்பர் 24, 2011

இலங்கையின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை இன்று வியாழக்கிழமை காலை கண்டி பொது வைத்தியசாலை அவசர - நரம்பியல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். திங்கட்கிழமை நள்ளிரவு வீட்டில் வழுக்கி விழுந்து படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததார்.


1938 ஆம் ஆண்டு கண்டியில் பிறந்த ஜெனரல் அனுருத்த லூகே ரத்வத்த- 1994 முதல் 2001 ஆம் ஆண்டுவரை பிரதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். மின்சக்தி வலுசக்தி அமைச்சர் உட்பட அமைச்சரவை அமைச்சுப் பதவிகளையும் அவர் வகித்தமை குறிப்பிடத்தக்கது. தலதா மாளிகையின் பிரதி தியவதன நிலமேயாகவும் இவர் பதவி வகித்துள்ளார்.


1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாவது ஈழ யுத்தம் ஆரம்பமான போது, விடுதலைப்புலிகளுக்கெதிராக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இவரது தலைமையின் கீழ் பிரதான பங்கை வகித்து இராணுவ நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டிருந்தன. 1995 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த யாழ்ப்பாணத்தை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது, இவர் முக்கிய பங்கை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.


இவர் மாவனல்லை தொகுதியின் முன்னாள் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரும் தலதா மாளிகையின் முன்னாள் தியவதன நிலமேயுமான ஹரிஸ் லூகே ரத்வத்தயின் மகனாவார். கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் லொகான் ரத்வத்தை- கண்டிமேயர் மகேந்திர ரத்வத்தை ஆகியோர்களின் தந்தையாவார். இவர் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநயாக்கவின் சகோதரரும் ஆவார்.


மூலம்[தொகு]