எசுப்பானியாவில் தொடருந்து தடம் புரண்டதில் குறைந்தது 78 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 25, 2013

எசுப்பானியாவின் வடமேற்கே தொடருந்து ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியதில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


விபத்து நடந்த இடத்தில் நிவாரணப் பணியாளர்கள்.
விபத்திற்குப் பின்னர் புகை மண்டலம்

தலைநகர் மாத்ரிதில் இருந்து பெரோல் நோக்கிப் பயணம் செய்த பயணிகள் தொடருந்து சண்டியாகோ டி கொம்போஸ்டெலா நகருக்கு அருகாமையில் தொடருந்தின் எட்டுப் பெட்டிகளும் தடம் புரண்டன. வளைவு ஒன்றில் செல்லக்கூடிய வேகத்தை விட இரு மடங்கு வேகத்தில் இத்தொடருந்து பயணித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்பத் தவறுகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை என ரெயில்வே தலைவர் ஜூலியோ போமார் கூறினார். இத்தொடருந்தில் 218 பேர் பயணம் செய்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது.


இது எசுப்பானியாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்துகளில் பெரியது எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. 1972 ஆம் ஆண்டில் எசுப்பானியாவின் தெற்கே அண்டலூசியா என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் 70 முதல் 80 வரையானோர் கொல்லப்பட்டனர். 1944 ஆம் ஆண்டில் இடம்பெற்ற விபத்தில் 78 பேர் உயிரிழந்தனர்.


மூலம்[தொகு]