எயிட்டியில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம் பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 13, 2010


நடு அமெரிக்காவில் கரிபியன் பகுதியில் அமைந்துள்ள எயிட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே 10 மைல் தொலைவில் 7.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சேத விபரங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை.


நிலநடுக்கம் ஏற்பட்ட இடம்

முதலில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து 5.9 மற்றும் 5 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிபர் மாளிகை, மருத்துவமனைகள், அரச அலுவலகங்கள் உட்பட பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. நாட்டின் தொலை தொடர்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கம் செவ்வாய் உள்ளூர் நேரம் 1653 (2153 கிரீன்விச்) நடந்தது என அமெரிக்க புவியியல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். சுனாமி எச்சரிக்கையும் எயிட்டியின் கரையோரப் பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கம் கடற்கரையோரமாக அல்லாமல் நிலத்துக்கு அடியில் நிகழ்ந்துள்ளதால் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


எயிட்டியில் பணியாற்றிவரும் ஐ.நா இலங்கைத் துருப்பினர் யாவரும் நலமாக இருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். 950 இலங்கைத் துருப்பினர் அமைதிப் படையாகப் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்