ஓக்லகோமா சூறைப்புயலில் சிக்கி குறைந்தது 91 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 21, 2013

அமெரிக்காவின் ஓக்லகோமா நகரப் பகுதியில் 2 மைல் சுற்றளவுடன் சூறாவளி தாக்கியதில் 20 சிறுவர்கள் உட்படக் குறைந்தது 91 பேர் கொல்லப்பட்டனர். 200 கிமீ/மணி வேகத்தில் வீசிய இப்புயலில் ஆரம்பப் பாடசாலை ஒன்று நேரடியாகத் தாக்கப்பட்டதில் இடிபாடுகளிடையே பலர் சிக்குண்டனர். மேலும் பாடசாலை சேதமடைந்தது.


2013 மே 20 ஓக்லகோமா சுழல்காற்று

அரசுத்தலைவர் பராக் ஒபாமா ஓக்லகோமா மாநிலத்தை பேரழிவுப் பகுதி என அறிவித்துள்ளார். நடுவண் அரசின் நிவாரண உதவிகள் உள்ளூர் மக்களுக்குச் செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டுள்ளார்.


நேற்று திங்கட்கிழமை உள்ளூர் நேரம் பிற்பகல் 2:56 மணிக்கு 55,000 மக்கள் தொகை கொண்ட மூர் என்ற புறநகரை சூறாவளி தாக்கி சுமார் 45 நிமிட நேரம் நிலை கொண்டிருந்தது. பிளாசா டவற்சு ஆரம்பப் பாடசாலையின் கூரைகள் பிடுங்கி எறியப்பட்டன, சுவர்கள் இடிந்து வீழ்ந்தன. மூன்று அடி உயரத்துக்கு கிடக்கும் இடிபாட்டுக் குவியல்களின் அடியில் வேறு பல மாணவர்களும் சிக்குண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பொதுவாக இத்தகைய சூறைப் புயல்கள் பொது வெளிகளையே தாக்கும், ஆனால் இம்முறை குடியிருப்புகளைத் தாக்கியுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


1999 மே 3 ஆம் நாள் இப்பகுதியில் தாக்கிய சூறாவளியினால் 40 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]