கன்னியா குமரி மாவட்ட ஆட்சிமொழிப் பயிலரங்கில் தமிழ்க்கணிமை விக்கிப்பீடியா பயிற்சி

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 15, 2014

கன்னியாகுமரி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், 20-08-2014 அன்று அரசு அலுவலர்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் நாகர்கோவில் சேது இலட்சுமிபாய் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நிகழவுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் அனைத்து மாவட்ட தலைநகரிலும், சிறப்பான ஆட்சிமொழி செயலாக்கத்தின் பொருட்டு அரசு அலுவலர்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கினை ஒருங்கிணைத்து வருகின்றது.

இப்பயிலரங்கத்தின் மதிய அமர்வில், 2 முதல் 5.30 மணிவரை பெரியார் பல்கலைக்கழத்தின் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி தமிழ்க் கணினித் மற்றும் விக்கிப்பீடியா பயிற்சி அளிக்க உள்ளார்.

இந்நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சியை பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி அளிக்க உள்ளார்.

நிகழ்ச்சி குறித்த தொடர்புக்கு: லெ.கல்யாணசுந்தரி, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ), அலைபேசி எண்: 9443736686