கமலின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம்: தமிழக அரசின் தடை தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 30, 2013

சர்ச்சைக்குரியதாகியுள்ள திரைப்படமான கமல் ஹாசனின் விஸ்வரூபம், தமிழகத்தில் வெளியாவது மீண்டும் சிரமமாகியுள்ளது.


இந்த வழக்கில் நேற்றைக்கும் இன்றைக்கும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழக அரசு விதித்த தடையினை எதிர்த்து கமல் ஹாசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை நேற்று நீதிபதி வெங்கட்ராமன் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். படத்தினை பார்வையிட்ட நீதிபதி, தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு, இந்த உத்தரவினை எதிர்த்து இன்று மேல் முறையீடு செய்தது.


தலைமை நீதிபதி எலிபி தர்மராவ் (பொறுப்பு) மற்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் இவர்களை உள்ளடக்கிய நடுவர் ஆயம், நேற்று நீதிபதி வெங்கட்ராமனால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை ரத்து செய்தது; "தமிழக அரசின் தடை தொடரும்" எனவும், இந்த வழக்கின் மீதான விசாரணையை அடுத்த புதன்கிழமைக்கு ஒத்தி வைப்பதாகவும் கூறியுள்ளது.



மூலம்[தொகு]