கர்நாடக முதல்வர் எதியூரப்பா பதவி விலகினார்

விக்கிசெய்தி இலிருந்து
(கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஞாயிறு, சூலை 31, 2011

கர்நாடக முதல்வர் எதியூரப்பா இன்று தனது பதவி விலகல் முடிவை அறிவித்தார். பாஜக தலைவர் நிதின் கட்காரிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கட்சியின் தலைமைக்கு கட்டுப்படுவதாக கூறியுள்ளார். இன்று மதியம் மாநில ஆளுநரைச் சந்தித்து பதவிவிலகல் கடிதத்தை அதிகாரப்பூர்வமாகக் கையளிப்பார்.


புதிய முதல்வராகத், தான் சொல்லும் நபரையே தெரிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை, பாஜக மேலிடம் ஏற்றுக் கொண்டதால், எதியூரப்பா தன் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்குச் சம்மதம் தெரிவித்தார்.


68 வயதாகும் எதியூரப்பா தலைமையில் தென் மாநிலமான கர்நாடகத்தில் 2008-ஆம் ஆண்டு மே மாதம் பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. ஆனால் எதியூரப்பா மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இடையே உட்கட்சி பூசலும் உருவானது. எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கும் ஆளானார். ஆனால் இவற்றையெல்லாம் கடந்து இதுநாள் வரை எதியூரப்பா தனது பதவியைக் காப்பாற்றி வந்தார். ஆனால் சட்டவிரோத சுரங்க குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. முதல்வர் எதியூரப்பா மீதான இரும்பு மற்றும் சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு 16 ஆயிரத்து 805 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதெனவும், சுரங்க நிறுவனத்திடம் இருந்து எதியூரப்பாவின் மகன்கள் நடத்தும் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது எனவும், அரசு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர் எனவும் லோக்அயுக்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]