கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அத்தநாயக்காவின் நியமனத்தை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 28, 2012

இலங்கையின் உயர்கல்வி அமைச்சு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தராகப் பணியாற்றுவதற்காக பேராசிரியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக்கா தகுதிவாய்ந்த அதிகாரியாக (Competent authority) நியமிக்கப்பட்டதை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து அவரது நியமனம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் அறிவிக்கிறார்.


இந்நியமனம் குறித்து தற்போதைய பதில் உபவேந்தர் முனைவர் பிரேம்குமார் அவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. வர்த்தமானி அறிவித்தலின்படி கடந்த 23ந் திகதியிலிருந்து இந்நியமனம் அமுலுக்கு வந்தது. முறைப்படியான உபவேந்தர் நியமனத்திற்காக உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் பேரவை மூன்று தமிழர்களின் பெயர்களை சிபார்சு செய்து அனுப்பிவைத்திருந்தது. ஆயினும் பேராசிரியர் அத்தநாயக்க இத்தெரிவுக்கு விண்ணப்பிக்கவில்லை.


2010ம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டிருந்த அசாதராண சூழ்நிலை காரணமாக அப்போதைய உபவேந்தராக இருந்த கலாநிதி என்.பத்மநாதன் பதவி விலகியிருந்தார். அதனை அடுத்து பதில் உபவேந்தராக கே.பி.பிரேம்குமார் செயற்பட்டு வருகிறார்.


பேராசிரியர் அத்தநாயக்க கிழக்குப் பல்கலைக்கழக பேரவைக்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக 2011 பெப்ரவரி முதல் டிசம்பர் வரை பணியாற்றினார். பல்கலைக்கழகத்திற்கு முறையான பேரவை தெரிவானதிலிருந்து இவரது பதவிக் காலம் முடிவடைந்தது.


மேற்படி நியமனத்தை எதிர்த்து கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் எதிர்ப்புநிலை விரிவுரைப் புறக்கணிப்புகளில் ஈடுபட்டு வந்தனர். உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அந்த அறிவித்தலை உடனடியாக ரத்துசெய்து, புதிய துணை வேந்தரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தம்மிடம் உறுதியளித்துள்ளதாக துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


மூலம்[தொகு]