சரத் பொன்சேகா பொது மன்னிப்பின் கீழ் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 22, 2012

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். அரசியலமைப்பின் 34வது பிரிவின் அடிப்படையில் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச வழங்கிய பொது மன்னிப்பை அடுத்தே இவர் விடுதலை செய்யப்பட்டார். 2010 பெப்ரவரி 8 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.


சரத் பொன்சேகா

சிறையிலிருந்து விடுதலை பெற்றிருந்தாலும் சரத் பொன்சேகா தேர்தலில் வாக்களிக்கவோ, தேர்தலொன்றில் போட்டியிடவோ முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது. பொன்சேகாவின் ஓய்வூதியம் மற்றும் இராணுவ பதவிநிலை என்பன தொடர்பிலும் எதுவும் கூறப்படவில்லை என்று தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், ராய்ட்டர் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். பொன்சேகா இதுவரை இராணுவத்தில் வகித்து வந்த ஜெனரல் பதவி உட்பட்ட தரங்கள் மற்றும் பதக்கங்கள் அனைத்தும் 2010 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் அரசுத்தலைவரினால் பறிக்கப்பட்டிருந்தன.


இதேவேளை, சரத் பொன்சேகா தனக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தீர்ப்புக்கு எதிரான தனது இரண்டு மேன்முறையீட்டு மனுக்களையும் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளார்.


யுத்தம் முடித்தமை குறித்த கேள்விகளை எதிர்கொள்வதற்கு எவரின் முன்னாலும் சமுகமளிக்கத் தயார்.

—சரத் பொன்சேகா

சிறையில் இருந்து விடுதலையான பின்னர் பிபிசி செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியில், போரின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார். எனினும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்த பன்னாட்டு விசாரணைக்கும் இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். யுத்தம் முடித்தமை குறித்த கேள்விகளை எதிர்கொள்வதற்கு எவரின் முன்னாலும் சமுகமளிக்கத் தயார் எனவும் அவர் கூறினார்.


பொன்சேகா, இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் இராணுவத்தினருக்கான ஆயுத கொள்வனவில் மோசடி இடம்பெற்றதென்ற குற்றச்சாட்டில் அவருக்கு இராணுவ நீதிமன்றம் 30 மாத சிறைத்தண்டனை வழங்கியிருந்தது. அத்துடன் வெள்ளைக்கொடி வழக்கில் அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 3 வருட சிறைத்தண்டனை வழங்கியது.


மூலம்[தொகு]