சர்ச்சைக்குரிய கருத்துகளால் தஸ்லிமா நஸ்ரினுக்கு நேபாளம் வரத் தடை

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 24, 2011

இந்தியாவின் ஒரு பகுதிதான் நேபாளம் என்ற கருத்தினை எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் வெளியிட்டதினால் கிளம்பிய கடும் எதிர்ப்பு காரணமாக நேபாளத்தில் நடக்கவுள்ள இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் தனது நேபாள பயணத்தை அவர் இரத்துச் செய்தார்


தஸ்லிமா நஸ்ரின்

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் (அகவை 49) வங்காளதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சர்ச்சைக்குரிய தனது எழுத்தினால் தனது சொந்த நாட்டிலிருந்து கடந்த 1994 ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்டார். தற்போது இந்தியாவில் வசித்து வருகின்றார்.


நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் முதன் முறையாக நான்கு நாட்கள் இலக்கிய மாநாடு நடக்கவுள்ளது. இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தஸ்லிமா நஸ்ரினும் கலந்துகொள்ள இருந்தார். இந்நிலையில் தனது டுவிட்டர் சமூகத் தளத்தில் இந்தியாவின் ஒரு பகுதிதான் நேபாளம் என கருத்தினை இவர் வெளியிட்டதினால் நேபாள நாட்டினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இலக்கிய மாநாட்டில் தஸ்லிமா கலந்துகொள்ள வந்தால், அவருக்கு கறுப்பு கொடி காட்டுவோம் எனவும் ஆவேசத்துடன் கூறினர்.


இது குறித்து நேபாள நாட்டு இலக்கிய மாநாட்டு அமைப்பாளர்கள், தஸ்லிமாவை நேபாளம் வர வேண்டாம் எனவும், அவ்வாறு வருமிடத்து பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாதெனவும் என யோசனை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தஸ்லிமா தனது நேபாள பயணத்தை ரத்துச் செய்தார்.


இது தொடர்பாக எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறுகையில், நேபாளம் செல்வதற்காக டில்லி சர்வதேச விமான நிலையம் வந்த போது தான் தனது சுவிட்சர்லாந்து கடவுச்சீட்டை கொண்டு வர மறந்துவிட்டதால், நேபாளம் செல்லும் விமானத்தை தவறவிட்டேன் என தெரிவித்திருந்தார்.


மூலம்[தொகு]