சர்வதேச கால்பந்துக் கழகத்தின் தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்து அமாம் விலகல்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 30, 2011

பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் (ஃபீஃபா) தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்து ஆசியக் கால்பந்து கழகக் கூட்டமைப்பின் தலைவர் முகம்மது பின் அமாம் நேற்று விலகிக் கொண்டார். தலைமைப் பதவிக்கான போட்டி வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. நான்காவது தடவையாக தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் செப் பிளேட்டரை எதிர்த்து தேர்தலில் போட்டிக்கு நின்ற ஒரே ஒரு நபரான 62 வயதான முகம்மது பின் அமாம் கத்தார் நாட்டைச் சேர்ந்தவர். 1998 ஆம் ஆண்டில் இருந்து செப் பிளேட்டர் தலைவராக இருந்து வருகிறார்.


தேர்தலுக்கு முன்னதாக இவர் கழக அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து பீபா ஒழுக்காற்றுக் குழுவின் விசாரணைக்கு முகம் கொடுத்ததைத் தொடர்ந்தே அமாம் இந்த முடிவை எடுத்துள்ளார். தன்னை போட்டியிலிருந்து விலக்குவதற்கான சதியே இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று அவர் தெரிவித்துள்ளார்.


தற்போதைய தலைவர் செப் பிளாட்டரும் ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஒழுங்கு விசாரணைக்கு உள்ளாகியுள்ளார்.


இதற்கிடையில், பீபாவின் பிரதித் தலைவர் ஜாக் வார்னர், மற்றும் முகம்மது அமாம் ஆகியோரை அக்கழகத்தின் பணிப்பாளர் குழுவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.


மூலம்[தொகு]