சிக்கிம், நேபாளம், திபெத்தில் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்தெம்பர் 19, 2011

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் மற்றும் நேபாள எல்லைப் பகுதியை மையமாக கொண்டு இமயமலைப் பகுதியில் தாக்கிய கடும் நிலநடுக்கத்தில் குறைந்தது 73 பேர் உயிரிழந்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முழுமையான ஆட்சேதம், பொருட்சேதம் பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட நில அதிர்வுகள் நேபாளத்தில் பல இடங்களிலும், வங்கதேசத்திலும், பிற இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளன. கடும் மழையால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.


சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.


இதற்கிடையே நிலநடுக்கத்தால் நேபாள தலைநகர் காத்மண்டுவில் இங்கிலாந்து தூதரக அலுவலக கட்டடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். லக்னோ, பாட்னா, கொல்கத்தா, தில்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். கேங்டாக் மற்றும் டார்ஜீலிங்கில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சிக்கிமின் சில பகுதிகளில் தொலைபேசி இணைப்புகளும் செயலிழ்ந்துள்ளன. மேற்கு வங்கத்திலும் தொலைபேசி இணைப்புகளில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.


மூலம்

விக்கிப்பீடியா
விக்கிப்பீடியா
விக்கிப்பீடியாவில் இத்தலைப்புக் குறித்து மேலும் கட்டுரைகள் உள்ளன: