சிங்கப்பூரில் பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியப் பெண் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 3, 2009, சிங்கப்பூர்:


பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 29 அகவையுடைய இந்திய வம்சாவழிப் பெண் ஒருவர் சிங்கப்பூரில் மரணமடைந்தார். சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியர் ஒருவர் பலியாவது இதுவே முதல் முறையாகும்.


இறந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஜூலை 25ம் தேதி சிங்கப்பூரில் உள்ள சாங்கி பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.


கடந்த நான்கு நாட்களாக அவரது நிலை மோசமானது. இதையடுத்து அவர் கோமா நிலைக்குச் சென்றார். நேற்று அவர் உயிரிழந்தார்.


அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே உடல் பருமன் பிரச்சினையும் இருந்து வந்தது. உடல் பருமன் உடையவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணத்தை விரைவாக கொண்டு வரும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மூலம்[தொகு]