சிரியாவின் வேதியியல் ஆயுதங்களை அழிக்க அமெரிக்காவும் உருசியாவும் ஒப்பந்தம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, செப்தெம்பர் 15, 2013

சிரியாவிடம் உள்ள வேதியியல் ஆயுதங்களை 2014ம் ஆண்டு மத்திக்குள் ஒழித்து விட அமெரிக்காவும் உருசியாவும் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் போது அமெரிக்க வான் தாக்குதல் சிரியா மீது நடக்கக்கூடாது எனவும் ஒப்பந்தம் சொல்கிறது.


மூன்று நாட்கள் ஜெனிவாவில் நடந்த கடுமையான பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தம் ஏற்பட்டதை இரு நாடுகளும் கூட்டாக அறிவித்தன. இது போன்ற சூழ்நிலை முன் ஏற்பட்டதில்லை என்று வேதியியல் ஆயுதங்கள் நிபுணர் ஏமி ஸ்மித்தன் கூறுகிறார்.


இந்த ஒப்பந்தம் மறைமுகமாக ஐக்கிய நாடுகள் சபையை முதன் முறையாக குறிப்பிட்டு சிரியா மீது ஐநா ஒப்புதல் பெற்ற இராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்றாலும் உருசியா சிரியா மீது எந்த இராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.


பென்டகனின் செய்தி தொடர்பாளர் சிரியா மீது அமெரிக்கா தனியாக வான் தாக்குதல் தொடுக்கும் சாத்தியக்கூறுகள் இன்னும் விலகவில்லை என்று கூறியுள்ளார். சிரிய அரசு செய்தி நிறுவனம் சானா இவ்வொப்பந்தத்தை வரவேற்றபோதிலும் இது ஒரு தொடக்கப்புள்ளி என்றும் கூறியுள்ளது. சிரிய அரசு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து எதுவும் சொல்லவில்லை. எப்படியிருந்தாலும் இவ்வொப்பந்தம் சிரிய அதிபர் ஆசாத்துக்கு தற்காலிகமான அமைதியை தான் தரும் என்றும் இது ஆசாத்தின் தீவிர நண்பனும் ஆயத விற்பனையாளருமான உருசியாவின் கருத்துப்படி பன்னாட்டுப்படை முடிவு எடுப்பது அமையும் என்றும் கருதப்படுகிறது.


சிரியா இவ்வொந்தப்படி நடக்கத்தவறினால் ஐநா சாசனம் VII இன் படி ஐநா இராணுவ நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான் கெரி கூறினார். இருசிய வெளியுறவு அமைச்சர் செர்கி லிவ்ராவ் சிரியா மீதான எந்த இராணுவ நடவடிக்கையையும் உருசியா எதிர்க்கும் என்றார். உருசியாவிற்கு ஐநாவில் வீட்டோ அதிகாரம் உள்ளது.


ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாத சிரியா மீது ஐநா நடவடிக்கை எடுக்கத்தவறினால் அமெரிக்கா தனியாக சிரியா மீது வான் தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.


இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற இரு நாட்டு ஆயுதக் கட்டுப்பாட்டாளர்களும் இரவு முழுதும் உழைத்தனர். இது பனிப்போரின் போது ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்காக உழைத்ததை நினைவுபடுத்தியது. இந்த ஒப்பந்தத்தை ஐநா தலைவர் பான்-கீ-முன் வரவேற்றுள்ளார். பிரிட்டன் வெளியுறவு செயலர் வில்லியம் ஏக் வரவேற்றுள்ளார். இவ்வொப்பந்தம் அக்டோபர் 14 முதல் நடைமுறைக்கு வருவதாக பான்-கீ-முன் தெரிவித்தார். சீனா, அரபு லீக், நேட்டோ, பிரான்சு ஆகியவை ஒப்பந்தம் நிறைவளிப்பதாகக் கூறியுள்ளன.


பெயர்தெரிவிக்காத அமெரிக்க வெளியுறவு அதிகாரி சிரியா 1000 டன் வேதியியல் ஆயுதங்கள் வைத்திருப்பதாக அமெரிக்காவும் உருசியாவும் ஒப்புக்கொண்டுள்ளன என்றார். வேதியியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய குறைந்தது 45 இடங்கள் சிரியாவில் இருக்கின்றன என்கிறது அமெரிக்கா. உருசியா வேதியியல் ஆயுதங்கள் உள்ள இடங்களின் எண்ணிக்கையை ஒப்புக்கொள்ளவில்லை.


ஆகத்து 21 அன்று நடந்த வேதியியல் ஆயுத தாக்குதலுக்கு சிரிய அரசு காரணம் என்று அமெரிக்கா கூறுகிறது. இதை உருசியா ஏற்கவில்லை, இதை கிளர்ச்சியாளர்கள் நடத்தியிருக்கலாம் என்கிறது.


மூலம்[தொகு]