சுதா ரகுநாதனுக்கு சங்கீத கலாநிதி விருது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 30, 2013

2013 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருது, கருநாடக இசைப் பாடகர் சுதா ரகுநாதனுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள மியூசிக் அகாதெமி கடந்த ஞாயிறன்று வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் சுதா ரகுநாதன். (ஆண்டு: 2012)


தனது தலைமுறைக் கலைஞர்களில் இவ்விருதினைப் பெறும் முதலாவது கலைஞர், சுதா ரகுநாதன். இவரை இந்த ஆண்டின் விருதினைப் பெறுபவராக அகாதெமியின் நிர்வாகக் குழு ஒருமனதாக தேர்ந்தெடுத்ததென அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற தலைமுறையிலிருந்து அடுத்தத் தலைமுறை கலைஞர்களுக்கு கருநாடக இசை எடுத்துச் செல்லப்பட்டு விட்டதையே இந்தத் தெரிவு காட்டுவதாக மியூசிக் அகாதெமியின் தலைவர் என். முரளி கருத்து தெரிவித்துள்ளார்.


ஜி. என். பாலசுப்ரமணியத்தின் இசைப் பள்ளி மரபில் வந்து சங்கீத கலாநிதி விருதினைப் பெறும் மூன்றாவது பாடகர் சுதா ரகுநாதன் ஆவார். கருநாடக இசையுலகில் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் இவ்விருதினை ஜி. என். பாலசுப்ரமணியம் 1958 ஆம் ஆண்டும், அவரின் மாணவியான எம். எல். வசந்தகுமாரி 1977 ஆம் ஆண்டும் பெற்றனர். இவ்விருவரின் மாணவரான திருச்சூர் வி. இராமச்சந்திரனுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு இவ்விருது வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருது, எம். எல். வசந்தகுமாரியின் மாணவியான சுதா ரகுநாதனுக்கு வழங்கப்படவிருக்கிறது.



மூலம்[தொகு]