சென்னையில் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 20 பேர் உயிரிழப்பு, பலர் இடிபாடுகளிடையே சிக்குண்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூன் 29, 2014


இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைநகர் சென்னையில் நேற்று அடுக்கு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் இடிபாடுகளிடையே சிக்குண்டுள்ளனர் என அஞ்சப்படுகிறது.


சென்னை, போரூருக்கு அருகிலுள்ள மௌலிவாக்கம் எனும் பகுதியில் 12-மாடி குடியிருப்பு மனை ஒன்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கட்டடம் இடிந்து வீழ்ந்தது. இதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். விபத்து நடந்த போது அங்கு கனத்த மழை பெய்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இடிபாடுகளிடையே நிவாரணப் பணியாளர்கள் அங்கு சிக்குண்டவர்களைத் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


"சுமார் 132 கட்டடத் தொழிலாளர்கள் சிக்குண்டுள்ளார்கள் என நம்பப்படுகிறது. இவர்களில் 100 பேர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்," அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுவரையில் 26 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளனர்.


கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையில், இவ்விபத்து நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் இந்தியத் தலைநகர் தில்லியில் 4-மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 5 சிறுவர்கள் உட்படப் 10 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]