சேலத்தில் ஆடி முதல் நாளை முன்னிட்டுத் தேங்காய் சுடும் விழா

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 18, 2014

நேற்று வியாழக்கிழமை ஆடி முதல் நாளன்று, தொன்ம நம்பிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு சேலம் மாவட்டத்தில் தேங்காய் சுடும் வழக்காறு நிகழ்ந்தது.


தேங்காய் சுடுதல்
தேங்காய் சுடப்பயன்படும் அழிஞ்சி குச்சிகள்
தேய்காய் சுடுதலின் காணொளி

இந்நிகழ்வை முன்னிட்டு மக்கள் தேங்காயை நார் முழுவதும் நீங்குமாறு தரையில் நன்கு தரையில் தேய்த்துப், பிறகு தேங்காயின் ஒரு கண்ணில் துளையிட்டு அதன் நீரை முழுவதும் வெளியேற்றிய பின், தேங்காயின் மேல் மஞ்சளைப் பூசுவார்கள். பின்பு தேங்காயினுள் எள், கடலை, வெல்லம், அவல், பாசிப்பயறு, ஏலக்காய் ஆகியவற்றை இட்டு அந்தத் தேங்காயை அழிஞ்சி எனப்படும் குச்சியில் செருகி, தங்கள் இல்லத்திற்கு அருகில் நெருப்பு மூட்டி நண்பர்கள், உறவினர்களுடன் நெருப்பில் தேங்காயைச் சுட்டார்கள். தீயில் கருகித் தேங்காய் நன்கு வெந்தவுடன், சுடப்பட்ட தேங்காயைக் கடவுளுக்கு வைத்துப் படைத்து உண்டார்கள். பின்பு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சுடப்பட்ட தேங்காய் படையலை வழங்கி மகிழ்ந்தார்கள்.


இந்தத் தேங்காய் சுடும் வழக்காறு சேலம், தருமபுரி, நாமக்கல், கிருட்டிணகிரி மாவட்டங்களுக்கே உரிய தனித்த நாட்டார் வழக்காறு எனவும் இந்த நிகழ்வு மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாகவும், மகாபாரதப்போர் ஆடி மாதம் 1-ஆம் நாள் தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ஆடி-18 அன்று முடிவுக்கு வந்தது, எனும் அடிப்படையில் ஆடி முதல் நாளன்று இந்நிகழ்வு கடைபிடிக்கப்படுவதாகவும் சேலம் வெள்ளாளப்பட்டியைச் சார்ந்த ப. செல்வகுமார் குறிப்பிடுகின்றார்.

மூலம்[தொகு]