டெக்சாஸ் ராணுவத்தளத்தில் துப்பாக்கிச்சூடு: 12 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 6, 2009

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் ஹூட் ராணுவ தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 வீரர்கள் உயிரிழந்தனர்; 31 பேர் படுகாயமடைந்தனர்.


ஈராக், ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பும் ராணுவ வீரர்களுக்கு அங்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, அவர்களுக்கு மனோதத்துவ சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் மேஜர் நிடால் மாலிக் ஹசன் என்பவர் திடீரென 2 கைகளில் துப்பாக்கிகளை எடுத்து ராணுவ வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், 12 ராணுவ வீரர்கள் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 31 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே, ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற டாக்டர் மாலிக் ஹசனை பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் சுட்டுக் காயப்படுத்தினர்.


துப்பாக்கிதாரி மேஜர் நிடால் ஹசன்

அமெரிக்காவில் இருந்து ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு ராணுவ வீரர்களை அனுப்பும் பணி உலகிலேயே மிகப்பெரிய ராணுவ தளமான ஃபோர்ட் ஹூட் (Fort Hood) தளத்தில் நேற்று நடந்தது.


துப்பாக்கிச்சூட்டின் போது மாலிக் ஹசனுக்கு உதவியதாகக் கருதப்படும் மேலும் 2 ராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாக லெப்டினன்ட் ஜெனரல் பாப் கோன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


ஃபோர்ட் ஹூட் உடனடியாக மூடப்படுகிறது. இது பயிற்சிக்காக அல்ல. இது ஒரு அவசரகால நடவடிக்கை."

—ஃபோர்ட் ஹூட் இணையத்தளம்

அவ்வட்டாரத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டன. இராணுவத்தளமும் உடனடியாக மூடப்பட்டதாக ஃபோர்ட் ஹூட் இணையத்தளம் அறிவித்தது. இவ்வறிவிப்பை அடுத்த சில மணி நேரத்தில் இவ்விணையத்தளமும் மூடப்பட்டது.


துப்பாக்கிதாரியின் நோக்கம் எதுவென்று உடனடியாகத் தெரியாவிட்டாலும், அவன் ஈராக்குக்குச் செல்வது குறித்து கவலையடைந்திருந்ததாகப் பலரிடம் தெரிவித்திருந்ததாக டெக்சாஸ் செனட்டர் கேய் அட்சிசன் தெரிவித்தார்.

மூலம்[தொகு]