தஜிக்கித்தான் மோதலில் 12 இராணுவத்தினர் உட்பட 42 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 25, 2012

மத்திய ஆசிய நாடான தஜிக்கித்தானின் கோர்னோ-பதக்சான் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோதல் ஒன்றில் 12 இராணுவத்தினரும், 30 போராளிகளும் கொல்லப்பட்டதாக அரசுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.


இம்மோதல்களில் மேலும் பலர் இறந்திருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர். 200 பேர் வரையில் இறந்திருக்கலாம் என தலைநகர் துசான்பே மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


கடந்த சனிக்கிழமை அன்று உயர் இராணுவ அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இராணுவத்தினர் இப்பிராந்தியத்தின் உள்ளூர்த் தலைவர் அயொம்பெக்கொவ் என்பவருக்கு எதிராக இந்த இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர். இவர் சரணடைய மறுத்ததனாலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பிராந்தியத்தின் தலைநகர் கோரோக் போர்ச்சூழலில் காணப்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.


1990களில் தஜிக்கித்தானின் உள்நாட்டுப் போரில் அயொம்பெக்கொவ் பங்குபெற்றிருந்தார். முன்னாள் சோவியத் குடியரசான தஜிக்கித்தான் 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது. மத்திய ஆசியாவின் மிகவும் வறுமையான நாடாக தஜிக்கித்தான் கணிக்கப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]