திரிபுரா அரசு திட்டங்களை சிறப்பாக அமலாக்குவதாக நிதி ஆணைக்குழு பாராட்டு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 15, 2013

இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ரூ.67 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று 14வது நிதி ஆணைக்குழுவிடம் மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.


ஒய். வி. ரெட்டி தலைமையிலான நடுவண் அரசின் 14வது நிதி ஆணைக்குழு மூன்று நாள் பயணமாக திரிபுரா வந்துள்ளது. இக்குழு முதலமைச்சர், உயரதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து நிதிச் செலவினங்கள் குறித்தும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தது.


இக்குழுவைச் சந்தித்த பின்னர் அகர்தலாவில் வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார், பெருமளவிற்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தி செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை ஈடுகட்டி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்ய சிறப்பு ஒதுக்கீடாக ரூ.67 ஆயிரத்து 104 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்திருப்பதாகக் கூறினார். நடுவண் அரசுத் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பான முறையில் அமலாக்கி வருவது குறித்து நிதிக்குழு பாராட்டு தெரிவித்தது என்று அவர் குறிப்பிட்டார்.


நாட்டிலேயே 73 சதவீதம் அளவிற்கு வனப் பாதுகாப்பை உறுதி செய்து மிகப்பெருமளவில் காற்று மண்டலத்தை தூய்மைப்படுத்துவதில் திரிபுரா அரசே முன்னிற்கிறது எனவும் நிதி ஆணைக்குழு பாராட்டியுள்ளது.


மூலம்[தொகு]