பக்ரைன் மக்கள் போராட்டங்களில் இருவர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 16, 2011

மத்திய கிழக்கு நாடான பக்ரைனில் கடந்த இரு நாட்களாக இடம்பெற்று வரும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் ஷியா முஸ்லிம்கள் இருவர் உயிரிழந்தனர்.


ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க, சிறு ஈயக் குண்டுகள் மற்றும் இரப்பர் தோட்டக்களை கொண்டு சுட்டும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசியும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் மேலும் ஒரு இளைஞர் கொல்லப்பட்டார்.


இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அடையாளம் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். பக்ரன் மன்னர் ஹமாத் பின் இசா அல் கலீபா நேற்று செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றும் போது, இறப்புகள் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார்.


பக்ரைனில் பெரும் கடற்படைத் தளத்தை வைத்துள்ள ஐக்கிய அமெரிக்கா இக்கொலைகள் குறித்து தமது கவலையைத் தெரிவித்துள்ளது. "சம்பந்தப்பட்ட அனைவரும் வன்முறையைக் கவிட வேண்டும்,” என அமெரிக்க அரசுத்திணைக்களப் பேச்சாளர் பி.ஜே. கிரவுளி கூறியுள்ளார்.


டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகத் தொடர்பு ஊடகங்களை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் தலைநகர் மனாமாவிலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மக்களை வீதிகளில் இறங்கி போராடுமாறு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.


பக்ரைன் சிறிய எண்ணெய் வள நாடான போதிலும் சுன்னி இனத்தவர்களான அல் கலீஃபா குடும்பத்தினரால் 18ம் நூற்றாண்டில் இருந்து ஆட்சி செய்யப்படுகிறது.


மூலம்[தொகு]