பழம்பெரும் நடிகர் திலீப் குமார் நடித்த திரைப்படம் வெளியிடப்படவிருக்கிறது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், திசம்பர் 25, 2013

பழம்பெரும் இந்தித் திரைப்பட நடிகர் திலீப் குமார் 23 ஆண்டுகளுக்கு முன்னர் நடித்த திரைப்படம் ஒன்று முதற் தடவையாக விரைவில் வெளியிடப்படவிருக்கிறது.


ஆக் கா தாரியா என்ற இத்திரைப்படம் முன்னர் நிதி நெருக்கடி காரணமாக வெளியிடப்படவில்லை என இதன் இயக்குநர் வி. எஸ். ராஜேந்தர் பாபு தெரிவித்தார். பின்னர் இதன் மூலப் பிரதி பெருமளவு சேதமடைந்தது. ஆனாலும், இத்திரைப்படத்தின் பிரதி ஒன்று அண்மையில் சிங்கப்பூர் பட விநியோகத்தர் ஒருவரிடம் இருந்து சேதமற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திலீப் குமார் இத்திரைப்படத்தில் இந்திய வான்படை அதிகாரியாக நடித்துள்ளார். ரேகா கதாநாயகியாக நடித்துள்ளார்.


"இத்திரைப்படம் திலீப் குமாரின் நடிப்பில் வெளியாகும் கடைசிப் படமாக இருக்கலாம். இதனைப் பார்ப்பது அவருக்கு மகிழ்ச்சியூட்டும்," என ராஜேந்தர் பாபு கூறினார்.


90 வயதாகும் நடிகர் திலீப் குமார் தற்போது உடல்நிலை குன்றிய நிலையில் உள்ளார். 1950கள், 60களில் இவர் பெரும் புகழ் பெற்ற நடிகராக விளங்கினார். இந்தி நடிகர்களில் அதிக விருதுகளைப் பெற்றவர். இவர் எட்டு பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார்.


அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இத்திரைப்படம் வெளியிடப்படும் என நம்பப்படுகிறது.


மூலம்[தொகு]