பழம்பெரும் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் காலமானார்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 25, 2013

பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 91 ஆகும்.


கடந்த வாரம் அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த சௌந்தரராஜன், சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பிய நிலையில் இன்று மதியம், சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.


1950 ஆம் ஆண்டில் கிருஷ்ண விஜயம் படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதடி" என்ற பாடல் மூலம் திரையுலகில் அடி வைத்தார். தென்னிந்தியத் திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பின்னணி பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் 10,000 இற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.


அன்றைய பிரபலமான நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், ராஜன், நாகேஷ் எனப் பலருக்கும் குரல் கொடுத்துள்ள சௌந்தரராஜன் இன்றைய நாயகர்கள் ரஜினிகாந்த், கமலகாசன் ஆகியோருக்கும் பாடியுள்ளார். ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசைப் பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.


1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மதுரையில் பிறந்த சௌந்தரராஜன், பிரபல இசை வித்துவான் பூச்சி சீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் முறையாக கருநாடக இசைப் பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடைக் கச்சேரி செய்து வந்தார்.


2012-ம் ஆண்டில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடலே டி. எம். சௌந்தரராஜன் குரலில் பதிவான கடைசிப் பாடல் ஆகும். சௌந்தரராஜனுக்கு மனைவி, ஒரு மகள், மற்றும் பால்ராஜ், செல்வகுமார் என இரண்டு மகன்களும் உள்ளனர்.


மூலம்[தொகு]