பிரித்தானியப் பாதுகாப்புச் செயலர் லியாம் ஃபொக்சின் இலங்கைப் பயணம் ஒத்திவைப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 17, 2010

பிரித்தானியப் பாதுகாப்புச் செயலாளர் லியாம் ஃபொக்ஸ், தனது இலங்கைக்கான தனிப்பட்ட பயணத்தை இரத்துச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதில், பிரித்தானியா தீவிரமாக இருப்பதாகவும் இந்நிலையில் பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் இலங்கையுடன் நெருங்கிய உறவை பேணுவது, பிரித்தானியாவின் வெளிநாட்டு கொள்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சு கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.


பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியாம் பொக்ஸ்

லியாம் ஃபொக்சின் இலங்கைப் பயணம் தொடர்பில், பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் வில்லியம் ஏக் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பாக நேற்றைய தினம் வெளிநாட்டு அமைச்சர் வில்லியம் ஏக்குடன், லியாம் ஃபொக்ஸ் பேச்சு நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் லக்சுமன் கதிர்காமரின் நினைவார்த்த நிகழ்வில் நாளை சனிக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றுவதற்காக அவர் இன்று இலங்கை வரவிருந்தார். இந்தப் பயணத்தை பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு வெளிப்படுத்திய எதிர்ப்பைத் தொடர்ந்து, அவர் இந்தப் பயணத்தை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


லியாம் பொக்சின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான அதிகாரபூர்வப் பயணத்தை நீடிக்கும் நோக்கில், இலங்கைப் பயணம் கைவிடப்பட்டுள்ளதாக, லியாம் ஃபொக்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் பொக்ஸ் இலங்கைக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்ளுவர் எனவும் அவரின் பேச்சாளர் தெரிவித்தார்.


லியாம் பொக்ஸ் கடந்த இரண்டு முறை இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுவதற்கு தனக்குப் பணம் கொடுக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார். முதல் பயணம் 2009 நவம்பர் 14-19 காலப்பகுதில் இடம்பெற்றது. அப்போது £3,000 செலவளிக்கப்பட்டது. இதற்கு எடின்பரோவில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறீலங்கா அபிவிருத்தி அறக்கட்டளை என்ற அமைப்பு பணம் கொடுத்ததாக இன்றைய தி ஐலண்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. இப்பயணத்துக்கான காரணமாக அவர் "இலங்கை சுந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டில் பங்கு பற்றுவதற்கும், இலங்கை அரசுத்தலைவர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்திக்கவும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.


மூலம்[தொகு]