புதிய அரசியலமைப்புக்கு எகிப்து மக்கள் ஒப்புதல் அளித்தனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 19, 2014

எகிப்தின் இராணுவ ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு 53 மில்லியன் வாக்கு செலுத்த தகுதியுடைய வாக்காளர்களில் 38.6% பேர் வாக்களித்தில், 98.1% வாக்காளர்கள் ஒப்புதல் அளித்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அரசியலமைப்பு முந்தைய இசுலாமிய அதிபர் முசுலிம் சகோதரத்துவ கட்சியின் முகமது மொர்சி அறிமுகப்படுத்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும். தேர்தல் ஆணையம் இவ்வாக்கெடுப்பு வெற்றி என்று அறிவித்ததுள்ளது.

எகிப்திய ஆர்ப்பாட்டக்காரர்

முசுலிம் சகோதரத்துவ கட்சி இப்புதிய வாக்கெடுப்பை ஏமாற்று என்று கூறியுள்ளது. இப்புதிய அரசியலமைப்புக்கான வாக்கு இராணுவம் கடந்த ஆண்டு சூலையில் மொர்சி அரசை நீக்கியதற்கு எகிப்து மக்கள் தரும் ஒப்புதல் என்று கருதப்படுகிறது. இவ்வாக்கெடுப்பை பல பன்னாட்டு அமைப்புகள் சுதந்திரமான சூழலில் நடக்கவில்லை என்று கூறி கண்காணிக்க மறுத்துவிட்டன. இவ்வரசியலமைப்பை ஏற்காமல் மறுத்து வாக்களித்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.


முதல் நாள் நடந்த வாக்கெடுப்பின் போது நடந்த கலவரத்தில் மொர்சியின் ஆதரவாளர்கள் பலர் இறந்தனர். வெள்ளிக்கிழமை நடந்த கலவரத்தில் நான்கு பேர் இறந்தனர் என சுகாதாரத்துறை அறிவித்தது. இவ்வரசியலமைப்புக்கான வாக்கெடுப்பு சனவரி 14 & 15ம் தேதிகளில் நடைபெற்றது. வெளிநாட்டு வாழ் எகிப்தியர்கள் சனவரி 8 முதல் 12ந் தேதி வரை வாக்களித்தனர்.


சனிக்கிழமை அன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கெர்ரி புதிய அரசியலைமைப்பு சட்டத்தின் படி முழுமையாக சுதந்திரமும் உரிமையையும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றார்.


2012ம் ஆண்டு மொர்சி தலைமையில் அரசியலமைப்புக்கான வாக்கெடுப்பு நடந்தது. இதை மதச்சார்பற்ற கட்சிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. 33% வாக்காளர்கள் இதில் கலந்து கொண்டனர். அதில் 64% பேர் இதற்கு ஒப்புதல் அளித்தனர்.


இராணுவத்தின் அரசலைமைப்பை 50 பேர் கொண்ட ஆணையகம் தயாரித்தது. 2 இசுலாமிய கட்சி உறுப்பினர்களை தவிர அனைவரும் இதில் கலந்துகொண்டனர். சட்டம் இயற்றுவதில் சரியாவே முதன்மையான மூலமாக இருக்க வேண்டும் என்பன போன்ற சில இசுலாமிய ஆதரவு கருத்துக்கள் இவ்வரசியலமைப்பில் நீக்கப்பட்டிருந்தன.


விமர்சகர்கள் இந்த அரசலைமைப்பு இராணுவத்துக்கு ஆதரவாக உள்ளதாக கருதுகின்றனர். இந்த புதிய அரசியலமைப்பின்படி அதிபர் இரண்டு முறைக்கு மேல் தொடர்ச்சியாக பதவி வகிக்கமுடியாது. அதிபர் நாடாளுமன்றத்தால் பழிச்சாட்டுக்கு ஆளாகலாம். இசுலாம் அரசாங்கத்தின் மதமாக இருந்தாலும் மற்றவர்களும் சுதந்திரமாக அவர்கள் மதத்தை அனுபவிக்கலாம். அரசு ஆண்களையும் பெண்களையும் இணையாக நடத்தும். அரசு மக்களை மதம், பால், குறிப்பிட்ட இடத்தைச் சார்ந்தவர்கள் என்று வேறுபடுத்தி நடத்தாது. இராணுவம் பாதுகாப்பு அமைச்சரை அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு நியமிக்கும்.


மூலம்[தொகு]