பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை

புதன், சூலை 29, 2009 பெங்களூரு, இந்தியா:


திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆகஸ்ட் 9-ம் நாள் பெங்களூரில் கடையடைப்பு நடத்தப்படும் என்று பல்வேறு கன்னட சங்கங்கள் அறிவித்துள்ளன.


திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் கன்னட சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் புதன்கிழமை நடந்தது. கன்னட சலுவாளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கன்னட சேனை, கர்நாடக ரக்ஷணாவேதிகே (பிரவீண்ஷெட்டி பிரிவு), மற்றும் கன்னட வேதிகே ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:


பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து ஆகஸ்ட் 9-ம் தேதி பெங்களூர் மற்றும் சாம்ராஜ்நகர் ஆகிய நகரங்களில் முழுஅடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கும்படியோ, சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையை நிறுவுங்கள் என்றோ தமிழக முதல்வர் கருணாநிதி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் கேட்டுக் கொண்டிருக்கவில்லை.


ஆனால் எடியூரப்பா தானாகவே முன்வந்து திருவள்ளுவர் சிலையைத் திறக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் பின்னணியில் மிகப் பெரிய திட்டம் உள்ளது. சர்வக்ஞர் சிலையை சென்னையில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு சென்னையில் சர்வக்ஞர் சிலை நிறுவப்பட்டால் காவிரிப் பிரச்னை ஏற்படும்போது அச்சிலையை தமிழர்கள் அடித்து உடைக்கலாம், கல்வீசித் தாக்கலாம். இவ்வாறு ஏற்பட்டால் அது சர்வக்ஞருக்கு அவமதிப்பு ஏற்படுத்துவது ஆகும். அதற்கு நாம் ஏன் அவகாசமளிக்க வேண்டும்?


சர்வக்ஞர் சிலையை நிறுவ அரசு விரும்பினால் பெங்களூரில் நிறுவட்டுமே? என்றார்.

மூலம்