போப்பாண்டவர் ஐக்கிய இராச்சியம் செல்கிறார்

விக்கிசெய்தி இலிருந்து

செப்டம்பர் 4, 2010

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இன்னும் இரு வாரங்களில் ஐக்கிய இராச்சியத்திற்குப் பயணம் செல்கிறார். செப்டம்பர் 16ஆம் நாள் தொடங்கி 19ஆம் நாள் வரை நீடிக்கும் இப்பயணம் வரலாற்று முதன்மை வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயண நிகழ்ச்சிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. வத்திக்கான் நகரிலிருந்து புறப்பட்டு அவர் முதலில் இசுகாத்துலாந்து நாட்டுத் தலைநகரான எடின்பரோ வந்து சேர்கிறார். அங்கே எலிசபெத் அரசியும் அவர்தம் கணவர் இளவரசர் பிலிப்பும் போப்பாண்டவரை வரவேற்பார்கள்.


பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகிய போப்பாண்டவர் ஆங்கிலிக்க சபைத் தலைவராகிய கான்டர்பரி பேராயரைச் சந்தித்து உரையாடுவார். பல சமயங்களைச் சார்ந்த தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார்.


இலண்டன் நகரிலுள்ள ஹைட் பூங்காவில் வழிபாடு நடத்துவார். பயணத்தின் இறுதி நாளாகிய 19ஆம் தேதி போப்பாண்டவர் தலைசிறந்த கிறித்தவ அறிஞராகிய கர்தினால் ஜான் ஹென்றி நியூமன் (Cardinal John Henry Newman, 1801-1890, கர்தினால் பட்டம்: 1879) என்பவருக்கு அருளாளர் பட்டம் அளிக்கும் சடங்கை நிகழ்த்துவார். இறைபக்தியிலும் பிறரன்புப் பணியிலும் சிறந்து விளங்கிய ஒருவர் இறப்பிற்குப் பின்னும் கடவுளோடு உயிர்வாழ்கிறார் என்னும் உண்மையை அறிக்கையிட்டு, அவரைப் பிறருக்கு முன்மாதிரியாக நிறுத்துகின்ற சடங்கு அருளாளர் பட்டமளிப்பு (beatification) என்று அழைக்கப்படுகிறது. அன்னை தெரேசாவுக்கும் இப்பட்டம் வழங்கப்பட்டது தெரிந்ததே. இதற்கு அடுத்த படியாக வழங்கப்படுவது புனிதர் பட்டம் (canonization) என்னும் பெயரால் குறிக்கப்படுகிறது.


கர்தினால் நியூமன் ஆங்கிலிக்க சபையிலிருந்து விலகி 1845இல் கத்தோலிக்க சபையைச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

மூலம்[தொகு]