மட்டக்களப்பின் 9 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் ஓராண்டு காலம் நீடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 22, 2011

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒன்பது உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு காலம் நீடிக்கப்பட்டுள்ளது.


இத்தகவலை நேற்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயசிங்க தெரிவித்தார். மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சருக்குள்ள அதிகாரத்திற்கமைய இந்த நீடிப்பை செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.


இதற்கிணங்க எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி நிறைவடையவுள்ள, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை, மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேசசபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மண்முனை மேற்கு பிரதேச சபை, மண்முனை தெற்கு பிரதேச சபை மற்றும் போரதீவுப்பற்று பிரதேச சபைகளின் பதவிக்காலம் 2013 மார்ச் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


மேற்படி உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்றது. குறித்த உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகப் பிரிவுகள் தமிழர்கள் கூடுதலாக வாழும் பிரதேசங்களாகும்.


மூலம்[தொகு]