மிசோஆகான் மாநிலத்திற்கு மெக்சிக்கோ படைகளை அனுப்பியது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 23, 2013

நைட் டெம்ளர் என்ற போதை மருந்து கடத்தல் குழுவிடமிருந்து தென்மேற்கு மாநிலமான மிசோஆகான் நகரங்களைக் காக்க மெக்சிக்கோ படைகளை அனுப்பி உள்ளது. மாநிலத்தில் பாதுகாப்பும் அமைதியும் திரும்பும் வரை படைகள் அங்கிருக்கும் எனப் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். உட்துறை அமைச்சர் மிகால் ஒசோரியோ சோங் உள்ளூர் அதிகாரிகளை மாநில தலைநகரில் சந்தித்தார்.


அரசு மீது அவநம்பிக்கை கொண்டுள்ள மக்கள் போதை மருந்து கடத்தல் குழுவிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சுய பாதுகாப்பு குழுக்களை அமைத்துக் கொண்டுள்ளனர்.


2006ல் போதைப்பொருட் கடத்தல் குழுக்கள் மீது அப்போதைய மெக்சிக்கோ அதிபர் கால்டிரென் நடவடிக்கை எடுத்த போதும் படை அணிகள் இம்மாநிலத்துக்கு அனுப்பப்பட்டன, அப்போதைய படை நடவடிக்கைக்கும் இப்போது அனுப்பப்பட்ட படை அணிக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டபோது உத்திகளில் மாறுபாடு உள்ளது என மிகால் ஒசோரியோ கூறினார். மாநில அரசும் நடுவண் அரசும் நெருக்கமாக பணியாற்றும் என்று கூறிய அவர் எவ்வளவு பணம் செலவு செய்யப்படும் என்று கூற மறுத்துவிட்டார்.


நைட் டெம்ளர் குழுவினர் தொழில் நிறுவனங்கள், கடைகள், பண்ணைகள் ஆகியவை பாதுகாப்பு பணம் கொடுக்காவிட்டால் அவற்றை தீ வைப்பது போன்ற நாசகார செயல்களினால் அழித்துவிடுவார்கள். ஊரகப்பகுதிகளில் இக்குழுவின் செயல்பாடு நன்கு தெரியும் படி 2010ல் காவல்துறையினருடன் நடந்த சண்டையில் மறைந்த இக்குழுவின் தலைவருக்கு நிறைய இடங்களில் சாலையோரம் சிறிய கோயில் கட்டியுள்ளார்கள்.


கோல்கோமன் நகரில் எரிக்கப்பட்ட மூன்று மரம் அறுக்கும் ஆலைகள் எரிக்கப்பட்டதற்கு அவை விற்கும் மரத்திற்கு கன மீட்டருக்கு 120 பிசோ பாதுகாப்பு பணம் கட்ட மறுத்ததே ஆகும். அவகாடோ உற்பத்தியாளர்கள் எக்டருக்கு 2000 பிசோ பாதுகாப்பு பணம் நைட் டெம்ளர் குழுவிற்கு செலுத்தவேண்டும்.


லா பெமிலியா குழுவின் தலைவர் நசாரியோ மரினோ கான்சாலசு 2010ல் பாதுகாப்புபடையுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டதை அடுத்து சீசசு மென்டுசு வர்காசு தலைமைப் பதவியேற்றதைப் பிடிக்காமல் செர்வனடோ கோமச் மார்டின்சு தலைமையில் நைட் டெம்ளர் பிரிந்தது.


மூலம்[தொகு]