ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் மேன் முறையீடு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 29, 2011

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் மரணதண்டனையை இரத்துச் செய்யக்கோரி மேன் முறையீட்டு மனுவொன்று இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவைத் தாக்கல் செய்வதற்காக மூன்று பேரிடமும் தனித் தனியாக பிரமாணப் பத்திரத்தில் நேற்று சிறைக்குச் சென்று வக்கீல்கள் கையெழுத்து வாங்கினர்.


மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி ஒரு மனுவும், ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி இன்னொரு மனுவும் என இரண்டு மனுக்கள் மூன்று பேரின் சார்பிலும் தனித் தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மூன்று பேரின் சார்பிலும் சட்டத்தரணி சந்திரசேகர் நீதிபதியிடம் அனுமதி பெற்றுள்ளார். இதனையடுத்தே அவர், இன்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதற்கு நீதிபதி அனுமதி அளித்துள்ளார். தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும், அதை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி பேரறிவாளன், முருகன், சாந்தன் சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை நாளையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.


ராஜி்வ் கொலையாளிகள் 3 பேரை, வரும் 9 ம் தேதி தூக்கிலிட ஏற்பாடுகள் நடந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரையும் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை குரல் எழுந்தது. தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை என முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தெரிவித்தார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]