ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 30, 2014

இராமேசுவரம் மீனவர்கள் 38 பேர் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள் 6 படகுகளில் இராமேசுவரத்தில் இருந்து நேற்று தமிழக மீன்துறையின் அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.


தென்னிந்திய மீன்பிடிப்படகு

இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் காரணம் காட்டி காங்கேசன்துறை கடற்படையினர் இன்று அதிகாலை சிறைபிடித்து இலங்கை யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.


இந்த இந்திய மீனவர்கள் அனைவரையும் இன்று யாழ் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை பணிப்பாளர் என். கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.


இலங்கை - இந்திய மீனவப் பிரதிநிதிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற 2 நாட்களில் இந்த மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.


மூலம்[தொகு]