2009 பொருளியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 12, 2009, சுவீடன்:


பொருளியல் முகாமைத்துவத்தில் ஆற்றிய பணிகளுக்காக எலினர் ஒசுட்ரோம் மற்றும் ஒலிவர் வில்லியம்சன் ஆகிய இரண்டு அமெரிக்கர்களுக்கு 2009 ஆம் ஆண்டுக்கான பொருளியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.


1968 இல் பொருளாதார நோபல் பரிசு கொண்டுவரப்பட்டதிலிருந்து, இதனைப் பெறுகின்ற முதலாவது பெண், ஒஸ்ட்ரொம் ஆவார்.


காடுகள், நீர்ப்பாசனத் தொகுதிகள் மற்றும் புல்வேளி மேய்ச்சல் நிலங்கள் போன்ற இயற்கையான வளங்களின் பயன்பாட்டை அரசாங்க மற்றும் தனியார் துறைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பார்க்கிலும், எவ்வாறு சிறப்பாக முகாமைத்துவம் செய்யலாம் என்று காட்டியதற்காக, அறிவியலுக்கான ரோயல் சுவீடிய அக்கடமி அவருக்கு இந்த பரிசை வழங்கியுள்ளது.


சந்தைச் செயற்பாடுகளான மூலப்பொருட்களின் விநியோகம் மற்றும் உற்பத்தி போன்றவை, ஒற்றை நிறுவனத்தின் உள்ளே மேற்கொள்ளப்படுகின்ற போது எந்த அளவுக்கு வெற்றிகரமாக அமைகின்றன என்பதை புலனாய்வு செய்ததற்காக வில்லியம்சன் அவர்களுக்கு பொருளியல் நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.


பரிசுத் தொகையான 10-மில்லியன் சுவீடிய குரோனர்கள் ($1.44மி) இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.


மூலம்