6 மில்லியன் மக்களுக்கு அவசர உணவு உதவி கோருகிறது எத்தியோப்பியா

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 23, 2009


எத்தியோப்பியாவில் 6 மி்ல்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கி இருப்பதாகவும் தமக்கு உடனடியான உணவு தேவையை பூர்த்தி செய்யும் படியும் அந்நாடு கோரியுள்ளது.


கடந்த காலங்களில் அங்கு நிலவிய பொதுவுடைமைக் கொள்கைகள் காரணமாக முதலாளித்துவ நாடுகளால் ஒதுக்கப்பட்டு இருந்த எத்தியோப்பியாவில் தற்போது இதுவரைக்கும் மில்லியன் மக்கள் பட்டினியால் இறந்துள்தை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் அந்நாடு பாரிய தொண்டு நிறுவனங்களின் உடனடியான நிவாரணப் பணியையும் கோரியுள்ளது.


தற்போது ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் நிலவி வருகின்ற மிகப் பெரும் வறட்சியும் இதற்கு காரணமாகியுள்ளதை தொடர்ந்து அங்கு மிக்ப் பெரும் பட்டினிச் சாவு நிலைமை தோன்றியுள்ளது. ஏற்கனவே கென்யா மற்றும் சூடான் என்பன கடும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன.


தொடரும் வறட்சி காரணமாக 60 வீதமான மக்கள் தமது வாழிடங்களில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் பல விளை நிலங்கள் கைவிடப்பட்டு மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.


தற்போதைய நிலையில் 8.5 மில்லியன் எதியோப்பியர்களில் 4.5 மில்லியன் பேருக்கு உடனடியாக உணவு உதவி தேவை என்றும் உதவியாக தமக்கு 121 மி்ல்லியன் அமெரிக்க டொலர் தேவை என்றும் எதியோப்பிய விவசாய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த பலகாலமாக சக்கரச் செயற்பாடாக நிகழும் வறட்சி காரணமாக எதியோப்பியா தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் 1984 இல் நிகழ்ந்த பாரிய வறட்சி காரணமான தாக்கங்கள் உலக கவனத்தை ஈர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதும் அதே நிலைமையை ஒத்த நிலைமை உருவாகி வருகின்றதாக தொண்டு பணியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அத்துடன் தற்போது உள்ள உணவு விலையும் அங்குள்ள மக்களை மேலும் பட்டிணிக்குள் இட்டுச் செல்கின்றதாகவும் தெரிவித்துள்ள தொண்டு நிறுவனங்கள் எதியோப்பிய அரசின் கணிப்பை விட அங்கு பட்டிணியை எதிர்நோக்கியுள்ள மக்கள் தொகை அதிகமாக இருக்க கூடும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளன.


போசாக்கு இன்மை காரணமாக சிறியவர்கள் பெரியவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக அவர்களின் அவயவங்கள் மெலிந்து ஒட்டிய நிலையில் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


ஆனால், எத்தியோப்பியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஏனைய விடயங்களும் காரணம் என பிபிசியின் ஆப்பிரிக்காவுக்கான செய்தி ஆசிரியர் கூறுகிறார்.


இவற்றில் துரிதமான மக்கள்தொகை வளர்ச்சியும், மற்றும் வேளாண்மை நிலங்களிலேயே மக்களை தங்க வைப்பது என்ற அரசுக் கொள்கை காரணமாக, வேளாண்மை நிலங்கள் மிகச் சிறிய துண்டுகளாகப் பிரிக்கப்பட்டமையும் அடங்குகின்றன. இந்த சிறிய துண்டு நிலங்களால், அவற்றில் பயிரிடுபவர்களுக்கான உணவுகளையே வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

மூலம்