யேமனில் போராளிகளின் ஊர்வலத்தில் தற்கொலைத் தாக்குதல்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 26, 2010

வடக்கு யேமனில் சியா ஹவுத்தி போராளிகளின் ஊர்வலம் ஒன்றின் மீது இன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர்.


அண்மையில் இறந்த ஹவுத்தி ஆன்மீகத் தலைவர் பாடர் அல்-டீன் ஹவுத்தி என்பவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட போராளிகளின் வாகன் அணி மீது தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது வாகனத்தைச் செலுத்தி வெடிக்க வைத்தார்.


கடந்த மூன்று நாட்களில் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாகும். புதன்கிழமை அன்று சியா சமய ஊர்வலம் ஒன்றின் மீது கார்க் குண்டு ஒன்று வெடித்ததில் 15 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமடைந்தனர்.


இன்றைய தாக்குதலை யார் நடத்தியதென்பது உடனடியாகத் தெரியவில்லை. ஹவுத்தி போராளிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே தற்போது போர் நிறுத்த உடன்பாடு நடைமுறையில் உள்ளது. ஆனாலும் ஆங்காங்கே சில தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.


கடந்த ஆறு ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வன்முறைகளில் கொல்லப்பட்டுள்ளனர். யேமனின் பலம் குறைந்த நடுவண் அரசு வடக்கில் தீவிரவாதப் போராளிகளையும், தெற்கில் பிரிவினைவாதிகளையும், அராபிய தீபகற்பத்தில் அல்-கைடா தீவிரவாதிகளையும் எதிர்த்துப் போராடி வருகிறது.


மூலம்[தொகு]